அல் அக்ஸா மசூதியை காத்து நின்ற இந்திய ராணுவ வீரர்கள் – இஸ்ரேல் உருவானதில் அவர்களின் பங்கு என்ன?

பட மூலாதாரம்,INDIAN EMBASSY IN ISRAEL
லயால்பூரின் பால் சிங், பாட்டியாலாவை சேர்ந்த ஆஷா சிங், அஜ்னாலாவை சேர்ந்த மகர் சிங், குவாலியர் படையை சேர்ந்த சீதாராம் மற்றும் காஜியாபாதை சேர்ந்த பஷீர் கான் ஆகியோரின் கல்லறைகள் அல்லது நினைவு சின்னங்கள் அவர்களின் சொந்த ஊரிலிருந்து ஆயிரம் மைல்கள் தாண்டி இருக்கும் ஜெருசலேமின் கல்லறைத் தோட்டத்தில் காணப்படுகின்றன.
முதல் மற்றும் இரண்டாவது உலக போர்களின் போது பிரிட்டிஷ் ராணுவத்தில் பங்கு வகித்த நூற்றுக்கணக்கான வீரர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கொல்லப்பட்டனர்.
அந்த சமயத்தில் பாலத்தீனம் மற்றும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் பலரது நினைவு சின்னங்களும் தற்போது இஸ்ரேலில் உள்ள நான்கு இடுகாடுகளில் தான் அமைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமல்ல, அவர்களின் நினைவை காலத்திற்கும் போற்றும் வகையில், அந்த கல்லறைகளில் வீரர்களின் பெயர்களும் சேர்த்து பொறிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பகுதி இந்திய ராணுவ வீரர்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்கள் பலரும் ஒன்றுபட்ட பஞ்சாப் மட்டுமின்றி தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள்.
டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட ‘இஸ்ரேலில் உள்ள இந்திய வீரர்கள் நினைவிடம்’ என்ற சிறு புத்தகத்தில் இவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. இந்த புத்தகம் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சிங் சர்னா பதவி காலத்தில் வெளியிடப்பட்டது.

பட மூலாதாரம்,GETTY IMAGES
இஸ்ரேல் – ஹமாஸ் போர்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையில் போர் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது.
அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலை ஹமாஸ் தாக்கியது, அதில் 1,200க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அன்று தொடங்கி வரிசையாக காசாவில் குண்டுமழை பொழிந்து வருகிறது இஸ்ரேல். மேலும், இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவில் தரைவழி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஹமாஸ் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி இதுவரை 11,000 மக்கள் காஸாவில் இறந்துள்ளனர். வடக்கு காஸாவின் பெரும்பகுதியில் கட்டடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது அங்குள்ள மருத்துவமனைகளை சுற்றி தீவிரமான சண்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் இந்த போரின் வரலாறு குறித்து தொடர்ந்து விவாதித்த வண்ணம் உள்ளனர்.
அதில் 20ம் நூற்றாண்டில் தற்போதைய இஸ்ரேல் நகரில் இந்திய ராணுவ வீரர்கள் காணப்படுவது போன்ற படங்களும் பகிரப்படுவதை பார்த்து ஆச்சரியமடைந்து வருகின்றனர் மக்கள்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
அல்-அக்ஸா மசூதிக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள டர்பன் அணிந்த வீரர்கள்
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள படங்களில் டர்பன் அணிந்த இந்திய ராணுவ வீரர்கள் தற்போதைய இஸ்ரேலில் அமைந்துள்ள அல்-அக்ஸா மசூதி அல்லது ‘மவுண்ட் கோவில்’ வெளிப்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது போல் உள்ளது.
அல்-அக்ஸா மசூதி அல்லது மவுண்ட் கோவில் என்ற இந்த பகுதி யூதர்கள் மற்றும் அரேபிய சமூகத்தினருக்கு புனித தலமாக இருப்பதாக நவ்தேஜ் சர்னா கூறுகிறார்.
பல தசாப்தங்களாகவே ஜெருசலேம் தொடர்பாக யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் ஒரு பதற்ற நிலையே நிலவி வருகிறது. அவ்வப்போது மோதல்களும் ஏற்படுகின்றன.
அந்த காலத்தில் இந்த பகுதிகள் அனைத்தும் பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்தது. அப்போது இந்தியர்கள் நடுநிலையானவர்கள் என்று கருதப்பட்டதால் இந்த தலத்தின் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர் என்கிறார் சர்னா.
இங்கு வரும் மக்களை சோதனை செய்யவும் இந்த வீரர்கள் பயன்படுத்தப் பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம்,INDIAN EMBASSY IN ISRAEL
பஞ்சாப் வீரர்களின் பங்கு
பிரிட்டிஷ் ராணுவமானது ஒன்றுபட்ட இந்தியா மட்டுமின்றி, ஒன்றுபட்ட பஞ்சாபை சேர்ந்த வீரர்களை உள்ளடக்கியதே ஆகும் என்று விவரிக்கிறார் ராணுவ வரலாற்றாளர் மந்தீப் சிங் பஜ்வா.
இந்த ராணுவ வீரர்கள் ஹைஃபா போர் உள்ளிட்ட பல்வேறு போர்களில் பங்கேற்றுள்ளனர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
அந்த காலத்தில் பெரும்பாலான இந்திய ராணுவ வீரர்கள் டர்பன் அணிந்திருந்ததால் அனைவரும் பஞ்சாபி அல்லது சீக்கியர் என்று சில நேரங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று கூறுகிறார் அவர்.
இருப்பினும், சீக்கியர்களும் அவர்கள் மக்கள்தொகை அடிப்படையில் பெரும் பங்கையே செலுத்தியுள்ளனர். அவர்கள் சினாய் – பாலத்தீன முகாமில் முக்கிய பங்கை வகித்துள்ளனர். மேலும் மேற்கு முனை மற்றும் இராக்கில் (முன்பு மெசபடோமியா என்று அழைக்கப்பட்டது) அவர்களின் பங்கு மிக முக்கியமானது.
இரண்டாம் உலகப்போர் வரை பெரும்பாலான இந்திய ராணுவ வீரர்கள் டர்பன் அணிந்திருந்தனர். இரண்டாம் உலகப்போரின் போதுதான் அவர்களின் உடையில் மாற்றம் தொடங்கியது.
சில வருடங்களுக்கு முன்பு இஸ்ரேல் அரசு வெளியிட்ட தபால் தலை குறித்து பேசும்போது, அது வெறும் சீக்கிய ராணுவ வீரர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய ராணுவ வீரர்களையும் கௌரவிக்கும் விதமாகவே வெளியிடப்பட்டது என்று கூறுகிறார் மந்தீப்.

பட மூலாதாரம்,IMPERIAL WAR MUSEUM PHOTOGRAPHIC ARCHIVE/OXFORD UNIVERSITY
இங்கு நடந்த ஹைஃபா போர்தான் முதல் உலக போரின் முக்கியமான சண்டை என்று குறிப்பிடுகிறார் மந்தீப்.
1918ல் நடந்த ஹைஃபா போரில் இந்திய வீரர்களும் முக்கிய பங்கு வகித்தனர். ஹைஃபா போரானது பிரிட்டிஷ் ராணுவம் மற்றும் ஒட்டோமான் பேரரசுக்கு இடையில் நடந்த தீர்க்கமான போர் என்று குறிப்பிடுகிறார் அவர்.
பிரிட்டிஷ் பேரரசிற்காக போர் புரிந்த ராணுவத்தில் பெரிய எண்ணிக்கையில் குதிரை படை இருந்தது. இது துருக்கிய ராணுவத்தை வீழ்த்தியது.
அந்த சமயத்தில் பிரிட்டிஷ் ராணுவம் இந்திய படைகளையும் கொண்டதாகவே இருந்தது, இவை ‘பேரரசின் சேவை துருப்புகள்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டன என்று கூறுகிறார்.
ஹைஃபா போரில் ஜோத்பூர் மற்றும் மைசூர் குதிரைப்படை வீரர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இவர்கள் ஜோத்பூர் மற்றும் மைசூர் குடும்பங்களுக்கு சொந்தமான பிரிவுகளை சேர்ந்தவர்கள்.

பட மூலாதாரம்,INDIAN EMBASSY IN ISRAEL
பாட்டியாலா குடும்பத்திற்கு சொந்தமான பாட்டியாலா குதிரைப்படை வீரர்களும் ஹைஃபா போரின் போது அந்த ராணுவத்தில் இடம்பெற்றிருந்தாகவும், ஆனால் போரில் பங்கேற்கவில்லை என்றும் கூறுகிறார் மந்தீப் சிங் பஜ்வா.
ஹைஃபா போரில் பஞ்சாப் போர் வீரர்களின் பங்கு குறித்து பேசுகையில், சீக்கிய வீரர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டதாக தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.
உலக போர்களில் பஞ்சாபி அல்லது இந்திய வீரர்கள் பெரும் பங்காற்றியுள்ளார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம் தான், ஆனால், ஹைஃபா போரில் சீக்கிய பங்கேற்பு உள்ளது என்று பரவி வரும் தகவல் உண்மையில்லை என்று அவர் கூறுகிறார்.

பாபா ஃபரித் தொடர்புடைய இடங்கள்
இரண்டாம் உலகப்போர் வரை பாலத்தீனத்தில் பெரியளவிலான போர் எதுவும் இல்லை என்று கூறுகிறார் நவ்தேஜ் சர்னா. இவர்தான் “ஹெரோதின் வாயில் – ஒரு ஜெருசலேம் கதை” என்ற நூலின் ஆசிரியர் ஆவார்.
லிபியா, லெபனான், எகிப்து மற்றும் பிற பகுதிகளில் இருந்தே இந்திய வீரர்கள் ஓய்வு மற்றும் சுகாதார நலன்களுக்காக ஜெருசலேம் வந்ததாக குறிப்பிடுகிறார் அவர்.
அவர்கள் இந்தியன் தர்மசாலா என்ற இடத்தில் ஓய்வு எடுத்தனர். இந்த இடம் பாபா ஃபரித் தர்மசாலா என்றும் அறியப்படுகிறது. 1,200ம் ஆண்டு இந்த இடத்திற்கு பாபா ஃபரித்(ஹஸ்ரத் ஃபரித்-உத்-தின் கஞ்ச் ஷுகர்) வந்ததாக கூறப்படுகிறது.

பாலத்தீனத்தில் இந்திய வீரர்களின் பங்கு என்ன?
முதல் உலகப்போரின் போது பாலத்தீன எல்லைக்குள் நடந்த பல்வேறு முக்கிய போர்களில் இந்திய போர்வீ ரர்கள் பங்கு பெற்றுள்ளனர். இன்னமும் கூட ஹைஃபா போரின் கதாநாயகனாக இந்தியாவை சேர்ந்த மேஜர் தல்பத் சிங் போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்திய தூதரகத்தால் வெளியிடப்பட்ட புத்தகத்தின்படி , இரண்டு உலக போர்களிலும் மத்திய கிழக்கு பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்களின் பங்கு மிக முக்கியமானது, குறிப்பாக பாலத்தீனத்தில்.,
அதே புத்தகத்தில் , அந்த சமயம் தோராயமாக 1,50,000 இந்திய வீரர்கள் இன்றைய எகிப்து மற்றும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம்,INDIAN EMBASSY IN ISRAEL
இந்த வீரர்கள் 1918ம் ஆண்டு செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற பாலத்தீன் நடவடிக்கைகளில் பங்கு பெற்றுள்ளனர்.
காமன்வெல்த் போர் கல்லறைகள் கமிஷன் கூற்றுப்படி, 1,302,394 இந்திய வீரர்கள் முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதே இந்த எண்ணிக்கை இரண்டாம் உலகப்போரில் 25 லட்சமாக உயர்ந்துள்ளது.

பட மூலாதாரம்,INDIAN EMBASSY IN ISRAEL
இஸ்ரேல் உருவானதில் இந்திய வீரர்களின் பங்கு என்ன?
ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக பிரிட்டிஷ் ராணுவப்படை போர் புரிந்ததில் முக்கியமான இடம் பாலத்தீனம் என்று கூறுகிறார் ராணுவ வரலாற்றாளர் மந்தீப் சிங் பஜ்வா.
ஒட்டோமான் பேரரசின் எல்லைகள் சினாய், சிரியா மற்றும் ஜோர்டான் வரை விரிந்திருந்தது.
இன்றைய இஸ்ரேலுக்கு அடித்தளமாக அமைந்த அதே போரின்போது தான் பால்ஃபோர் பிரகடனம் வெளியிடப்பட்டதாக அவர் கூறுகிறார்.
பிரிட்டிஷ் ஜெனரல் ஆலன்பி 1917ம் ஆண்டு ஜெருசலேமை கைப்பற்றியதாகவும், அவரது படையில் இந்திய ராணுவ வீரர்கள் இடம்பெற்றிருந்ததாகவும் கூறுகிறார் நவ்தேஜ் சர்னா.

பட மூலாதாரம்,NAVTEJ SARNA
உள்ளூர் மக்கள் இந்த வீரர்களை எப்படி நினைவு கூர்கிறார்கள்?
ஹைஃபாவை சேர்ந்த மக்கள் மேஜர் தல்பத் சிங்கிற்கு சிலை அமைக்க விரும்புவதாக சொல்கிறார் நவ்தேஜ் சர்னா. நாம் இதை ஆதரிக்கிறோம்.
வருடாந்திர கொண்டாட்டமாக ஹைஃபா தினம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 23ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
ஹைஃபா கல்லறை வெறும் ஹைஃபா போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு மட்டுமானதல்ல, பிற ராணுவ வீரர்களுக்குமானது தான் என்றும் ஹைஃபா தினத்தில் இந்த கல்லறையில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மற்றும் ஹைஃபா போரில் ஈடுபட்ட வீரர்களும் நினைவு கூரப்படுவதாக தெரிவிக்கிறார் நவ்தேஜ்.

பட மூலாதாரம்,INDIAN EMBASSY IN ISRAEL
சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பல்வேறு அதிகாரிகளும் கூட இஸ்ரேல் சென்று இந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
ஆனாலும், காலம் செல்ல செல்ல பலருக்கும் இந்த வீரர்களை பற்றி தெரிவதில்லை என்று கூறும் நவ்தேஜ் ஹைஃபாவில் வாழும் மக்கள் இன்னமும் ஹைஃபா போரில் பங்கேற்ற வீரர்களை நினைவில் வைத்துள்ளதாக தெரிவிக்கிறார். ஹைஃபா ஹிஸ்டாரிக்கல் சொசைட்டி என்ற அமைப்பும் அங்கு செயல்பட்டு வருகிறது.

பட மூலாதாரம்,INDIAN EMBASSY IN ISRAEL
இந்திய வீரர்களின் கல்லறை எங்கு உள்ளது?
இஸ்ரேலில் உள்ள நான்கு கல்லறைகளில் இந்திய வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது அவர்களின் நினைவுச்சின்னங்கள் அங்கு உள்ளது.
ஜெருசலேம் இந்திய போர் கல்லறையில் ஜூலை 1918 முதல் ஜூன் 1920 வரையிலான காலக்கட்டத்தில் 79 இந்திய போர் வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹைஃபா இந்திய போர் கல்லறையில் கூட பஞ்சாப், உத்தர பிரதேசம், ஒடிஷா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த ராணுவ வீரர்களின் நினைவு சின்னங்கள் உள்ளன.
பெரும்பாலான இந்திய வீரர்கள் ரமல்லா போர் கல்லறையில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 528 கல்லறைகள் உள்ளன. உலகின் முதல் நினைவு சின்னமும் இங்குதான் அமைந்துள்ளது.
1941ல் உருவாக்கப்பட்ட ‘காயாத் கடற்கரை போர் கல்லறையில்’ இரண்டாம் உலகப்போரில் இடம்பெற்ற 691 வீரர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் 29 பேர் இந்தியர்கள்.
முதல் உலகப்போரில் இறந்து போன வீரர்களுக்கான நினைவு சின்னங்கள் காமன்வெல்த் போர் கல்லறை கமிஷனால் உருவாக்கப்பட்டது என்கிறார் நவ்தேஜ் சர்னா.
இந்த கல்லறைகளிலேயே மிக முக்கியமானது ஹைஃபா கல்லறைதானாம்.
1918ம் ஆண்டு நடைபெற்ற ஹைஃபா போரில் மைசூர், ஜோத்பூர், பிகானேரை சேர்ந்த குதிரைப்படைகள் பங்கேற்றன. இந்த பிரிவுகளின் நினைவாக புது டெல்லியில் மூன்று ராணுவ வீரர்கள் சிலை கொண்ட நினைவு சின்னம் நிறுவப்பட்டுள்ளது.

பட மூலாதாரம்,X/MANDEEPSINGHBAJWA
அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்தான் அந்த வீரர்கள் இறந்திருக்க வேண்டும் என்று இல்லை. சில நேரங்களில், அந்த வீரர்களின் நினைவாக வேறு கல்லறைகளில் கூட அவர்களின் பெயர்களை தங்கியுள்ள நினைவு சின்னங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த வீரர்கள் இந்து, முஸ்லீம், சீக்கிய மதங்களை சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார் சர்னா.
இதுவரை இல்லாத வகையில் இந்த இடத்தை கண்டுபிடித்து, தகவல்களை சேகரித்து, அவற்றை படமாக பிடித்து சிறு புத்தகமாக வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார் அவர்.
நாங்கள் போர் கல்லறைகளுக்கான காமன்வெல்த் கமிஷனுடன் மிக நெருக்கமாக பணியாற்றினோம். தற்போது எப்போதெல்லாம் இந்திய அரசு அங்கு செல்கிறதோ அவர்களும் மரியாதை நிமித்தமாக அங்கு வந்து செல்வார்கள் என்றார் சர்னா.
பிரிட்டிஷ் பேரரசின் போர் வீரர்களுக்காக 60 நாடுகளில் கட்டப்பட்டுள்ள நினைவு சின்னங்களை காமன்வெல்த் போர் கல்லறைகள் கமிஷன் பராமரித்து வருவதாக கூறுகிறார் ராணுவ வரலாற்றாய்வாளர் மந்தீப் சிங் பஜ்வா. இந்தியாவும் இந்த செலவுகளில் பங்களித்து வருகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)